தமிழும் நடையும்

அவசரம் நம் காலத்தின் குணங்களுள் ஒன்று. துரித உணவு தொடங்கி துரிதச் செய்திகள், துரிதப் புத்தகங்கள் என எங்கும் அவசரம். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக வேகமாகச் செய்துவிடும் எண்ணம் வளர்ந்திருப்பதால், தவறுகள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. அதனாலேயே, அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வளர்ந்திருக்கிறது. ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இடம்பெறும் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் – தலைப்புச் செய்திகள் உட்பட, செய்தித்தாள்கள், ஆளுமைகளின் ட்வீட்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் போன்ற முக்கியமான இடங்களில்கூட பிழைகள் மலிந்திருக்கின்றன; பொருள் மயக்க வாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன. சினிமா, தொலைக்காட்சி, ஓடிடி என வெகுஜனத் தளத்தில் மட்டுமல்லாது எழுத்துத் துறைகளிலும் இது இன்றைய யதார்த்தம். இதைக் குறையாக அல்லாது, ‘பொருள் உணர்ந்து’ வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும், வாக்கியத்தில் ஒரு வார்த்தையை எங்கே இடம்பெறவைக்க வேண்டும் என்பதிலும் பிரக்ஞையற்று இருப்பதைக் காரணமாகச் சொல்லலாம்.

உதாரணமாக, ‘நூரானி அவர்களின் ஆர்எஸ்எஸ் குறித்த நூல் ஒரு நல்வரவு’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பே நூரானியுடையது என்ற மயக்கம் இந்த வாக்கியத்தில் இருக்கிறது. உள்ளடக்கத்தின் பின்னணி தெரிந்திருக்கும்போது பிரச்சினை இல்லை. உள்ளடக்கம் பரிச்சயமில்லாதபோது தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. இந்த வாக்கியத்தை, ‘ஆர்எஸ்எஸ் குறித்த நூரானியின் நூல் ஒரு நல்வரவு’ என்று எழுதுவது சரியாக இருக்கும்.

இன்னொருபுறம், நம்மிடையே சீரான வார்த்தைப் பயன்பாடானது சாத்தியமற்றதாகிருக்கிறது. தமிழ் மொழியின் இயல்பும் இதற்குக் காரணம்; ஒட்டுநிலை கொண்ட மொழி தமிழ். உதாரணமாக, ‘எழுதுதல்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் இது write, wrote, written, writing என்று ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ப துல்லிய வடிவத்தைப் பெற்றுவிடும். இன்ன பிறவற்றுக்கு வேறு துணை வார்த்தைகளைத் தன்னுடன் தனியாகச் சேர்த்துக்கொள்ளும்; தன்னோடு ஒட்டிக்கொள்ள அனுமதிக்காது.

ஆனால், தமிழில் அப்படியல்ல. எழுது, எழுதுவேன், எழுதுவான், எழுதுகிறேன், எழுதுகின்றேன், எழுதுகிறாள், எழுதுகிறார், எழுதுவது, எழுதுவதும்கூட என்று நீளும். எல்லா வார்த்தைகளிலும் ‘எழுது’ என்பது முழுமையாக இருக்கிறதே என்றால் எழுதினான், எழுதாமல் என்று இப்படியும் வடிவம் எடுக்கும். அடுத்த கட்டமாக, ‘எழு’ என்பதையும் எடுத்துக்கொள்ள முடியாது; அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருக்கிறது. எழுதேம்ல, எழுதுடே, எழுதணும்ங்க — இப்படியான வட்டார வழக்குகளையும் இணைத்துக்கொண்டால் இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுபோகும்.

நவீன வாசிப்புக் கருவிகளில் தமிழ் அகராதியை எளிதாகப் பயன்படுத்திவிட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, தமிழ் மொழியின் அமைப்பும் ஒரு முக்கியமான காரணம். இதில் தட்டச்சுப் பிழைகளையும் ஒற்றுப் பிழைகளையும், ஒரே வார்த்தையை விதவிதமாக (ஏற்கனவே, ஏற்கெனவே, ஏற்கெனெவே, ஏற்கனவே) எழுதும் நம் பழக்கத்தையும் சேர்த்துக்கொண்டால் இது இன்னும் சிக்கலுக்குரியதாகிறது. இன்னொரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், வார்த்தைகளைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதில் நாம் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில்லை என்பது.

இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் வேறுசில சிக்கல்களையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழில் சில வார்த்தைகள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் பிரிந்தும்தான் வரும். உயிர்வரின் உக்குரள் மெய்விட்டோடும் என்ற இலக்கண அர்த்தத்திலோ அல்லது கவித்துவத்துக்காக வார்த்தைகளைச் சேர்த்து எழுதும் அழகுணர்வு சார்ந்தோ இதைச் சொல்லவில்லை. சில வார்த்தைகளைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்போது, அர்த்தப்பாடே மாறிப்போகும் அபாயம் உண்டு. அதுதான் விஷயம். இது ஏனென்றால், சுந்தர் சருக்கை நம் கவனத்துக்குக் கொண்டுவருவதுபோல வாக்கியத்துக்கும் அர்த்தம் உண்டு.

‘தமிழில் சில வார்த்தைகள் சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் பிரிந்தும் வரும்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

இந்த வாக்கியத்தின் அர்த்தம் நமக்குத் தெரியும். இந்த வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் நமக்குத் தெரியும் என்பதால்தான் வாக்கியத்தின் அர்த்தமும் தெரிந்திருக்கிறதா?

எனில், இந்த வாக்கியத்தைப் பாருங்கள்: ‘வரும் பிரிந்தும் சில தமிழில் வார்த்தைகள் இடங்களில் சில சேர்ந்தும் இடங்களில் சில.’

முந்தைய வாக்கியத்திலுள்ள அதே வார்த்தைகள்தான் இந்த வாக்கியத்திலும் இருக்கின்றன. ஆனால், இந்த வாக்கியம் அர்த்தமற்றிருக்கிறது. சில சமயங்களில், வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டிருப்பது மட்டும் போதுமானதல்ல. வாக்கியமும் அர்த்தத்தைத் தருகிறது. ஆக, வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதுபோலவே வாக்கியத்துக்கும் அர்த்தம் உண்டு என்பதை நினைவில்கொள்வோம்.

‘க்ரியா’ ராமகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்ட ஆரம்ப நாட்களில், அவர் குறித்துவைத்திருந்த சில வாக்கியங்களைக் காட்டினார். முப்பது வாக்கியங்கள் இருக்கும். தமிழில் பெரும்பாலானவர்கள், அடிக்கடி செய்யும் பிழைகள் அவை என்பதாகச் சொன்னார். ஆனால், அதிலுள்ள பிழைகளைச் சொல்வது எனக்குக் கடினமாக இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதாகவே பட்டது. அப்படித் தோன்றியதற்குக் காரணம், வார்த்தைப் பயன்பாடு தொடர்பான பிரக்ஞை இல்லாமல் இருந்ததுதான்; நானும் அதே போன்ற பிழைகளைச் செய்துவந்திருக்கிறேன் என்பதால் அவையெல்லாம் பிழைகளாக எனக்குத் தோன்றவில்லை. அதாவது, ‘பொருள் உணர்ந்து’ வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இப்போதும்கூட, வாக்கிய அமைப்பிலும் மொழிப் பயன்பாட்டிலும் கவனமுடன் செயல்படுவதாகச் சொல்லும் எழுத்தாளர்களும் பதிவர்களும் பொருள் மயக்கங்களோடும் பிழைகளோடும் எழுதுவதைப் பார்க்க முடிகிறது.

இவற்றைக் கற்றுக்கொள்ள அதிகப் பிரயத்தனம் வேண்டியதில்லை. மிக எளிமையானது. எனவே, வார்த்தைப் பயன்பாடு சார்ந்து பிரக்ஞையை உருவாக்கும் பொருட்டு, நான் கற்றுணர்ந்தவற்றை இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன். இலக்கணரீதியாக அல்லாமல் பயன்பாட்டுத் தளத்தில் சில எளிமையான உதாரணங்களோடு எழுதிப்பார்க்கிறேன்.

தமிழ் வாக்கியங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இருந்து, கொண்டு, கொள், வைத்து, கூட, தான், போல, செய், பார், எல்லாம், வரும், விடு, உடன், போது, மீது, மேல், முன்/பின், கூடிய/கூடாது, வேண்டும்/வேண்டாம், முடியும்/முடியாது போன்ற வார்த்தைகளிலிருந்து தொடங்கலாம். வாய்ப்பிருக்கும் பட்சத்தில், வாக்கியத்தில் ஒரு வார்த்தையை அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகளை இடம் மாற்றித் தருவதன் வழியாக எப்படிப் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கலாம் என்றும் பேசிப்பார்ப்போம். அதேபோல, காற்புள்ளிப் பயன்பாட்டில் அல்லது ஒரு வாக்கியத்தில் நிறுத்தி வாசிக்க வேண்டிய இடங்களில் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்தும் பேசிப்பார்க்கலாம். சட்டக் கோப்புகளில் இடம்பெறும் வாக்கியங்களில் நாம் காற்புள்ளியை சரியாகப் பயன்படுத்தவில்லை அல்லது காற்புள்ளியே இல்லாமல் வாக்கியம் அமைத்திருக்கிறோம் என்றால், நம்முடைய வாக்கியங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி வாசித்துப் பொருள்படுத்திக்கொள்ளலாமாம். இந்தப் பிரச்சினை ஒருவர் அர்த்தப்படுத்திக்கொள்ளும் முறை சார்ந்தது அல்ல; வாக்கிய அமைப்பிலேயே அதற்கான தன்மை உண்டு. ஒரே ஒரு வார்த்தையை நாம் இடம் மாற்றினோம் என்றால் பொருளே மாறிவிடும்.

மிக எளிதாகக் களைய சாத்தியமுள்ள சில விஷயங்களை ‘தமிழும் நடையும்’ என்ற தலைப்பின்கீழ் இங்கே தொகுத்துக்கொள்கிறேன். இவற்றையெல்லாம் அறிந்துகொள்வதன் வழியாகப் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கலாம். பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்போது வாக்கிய ஓட்டம் சீராக இருக்கும். வாசிப்பில் பிசிறு தட்டாது.

பிழைகளைப் பற்றி எழுத நினைக்கும்போது நானும் பிழைகளுடன் எழுதிவிடுவேனோ என்ற பதற்றமும் கூடவே வந்துவிடுகிறது. எனவே, என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் சுட்டிக்காட்டுங்கள். இணைந்து கற்றுக்கொள்வோம். மொழியை அறிந்துகொள்ள முயல்வதும் ஒரு முடிவற்ற செயல்பாடுதான்.

One thought on “தமிழும் நடையும்

  1. பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன்; இம்முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. சாரு நிவேதிதா, மகுடேசுவரன், என். சொக்கன், கண்ணபிரான் ரவிசங்கர் போன்ற மொழிப்பயன்பாட்டில் அக்கறையுள்ளோர் நினைவுக்கு வருகிறார்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

    Like

Leave a comment